Logo
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பாப்பிரெட்டிப்பட்டி

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE - PAPPIREDDIPATTI

Affiliated to Periyar University, Salem-11 - (Recognized Under Section 2(f) & 12(B) of UGC Act, 1956)
Dharmapuri - 636 905, Tamilnadu, India.

Government Arts and Science College, Pappireddipatti

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கடந்த இரு நாட்களாய் (05.02.2025 மற்றும் 06.02.2025) போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே நடத்தப்பட்டது. கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், தருமபுரி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கல்லூரியின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுத்துறை, தருமபுரி இணைந்து இந்நிகழ்வினை இரு நாட்கள் மிகச் சிறப்பாக நடத்தின.

05.02.2025 புதன் அன்று பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் திருவள்ளுவர் திறந்த வெளிக் கலையரங்கில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தான பலவேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள ERK கலைக் கல்லூரி, ERK கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா, நாடகம், நடனம், மீம்ஸ், குறும்படம் ஆகிய போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக வியாழன் (06.02.2025) அன்று மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையினை அரூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர். எஸ்.கரிகால் பாரி சங்கர் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்விற்கான வரவேற்புரையினை கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியர் திரு.த.அருண்நேரு அவர்கள் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வீ.இரவி அவர்கள் வழங்கிய தலைமையுரையில், ”போதையில்லா சமுதாயத்தினை உருவாக்கிட மாணவர்கள் உறுதுணையாக இருத்தல் வேண்டும்“ என்றார். சிறப்பு விருந்தினரை கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் கோ.ஐயப்பன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பேசுகையில், மாணவர்கள் போதைப் பொருட்களின் நடமாட்டத்தினை தங்களது பகுதியில் கண்டால், தனது அலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றார். கல்லூரியின் பொன்னான காலங்களை தவறான பாதையில் செல்லாது கல்வியின்கண் தங்களது கவனத்தை செலுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினரிடம், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கேள்விகள் தொடுத்தனர். அவரும் தனது பணிக்கால அனுபவங்களை சுவாரசியமாக மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத்தோடு இணைந்து கல்லூரியின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.ஜெயராமன் அவர்கள் செய்திருந்தார். தொகுப்புரையினை நூலகர் கி.ச.கல்யாணி அவர்கள், நன்றியுரையினை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் கி.ஜெயபிரகாஷ் வழங்கினர். போட்டிகளில் வெற்றிபெற்ற 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். நிகழ்வில் அனைத்து துறைத்தலைவர்களும், உதவிப்பேராசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், மாணாக்கர்களும் பங்கேற்றனர்.

© 2024 - Government Arts and Science College - Pappireddipatti.
Developed & Maintaining by Office of  GASC PAPPIREDDIPATTI